வன உயிரின பாதுகாப்பில் தமிழகம் முன்னணி மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வன உயிரின பாதுகாப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வன உயிரின பாதுகாப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வன உயிரின வாரிய கூட்டத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது:
 
வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களைத் தேர்வு செய்தல், வன உயிரினங்களின் மேன்மை, அங்கு வாழக்கூடிய வன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் பாதுகாப்பு தொடர்பான உரிய கொள்கை முடிவுகளை வகுத்தல், வன உயிரின  பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளுதல், வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தி, வன உயிரின  பாதுகாப்புக்குக் குந்தகமின்றிச் செயல்படுத்துதல் போன்ற இதர இனங்கள் பற்றி விவாதித்தல், உரிய ஆலோசனைகளை பெற்று நடைமுறைக்கு கொண்டு வருதல், வன உயிரின பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசு இந்த வாரியத்தில் முன்வைக்கும் இனங்கள் பற்றி முடிவெடுப்பது போன்றவை இந்த வாரியத்தினுடைய முக்கிய பணிகள்.

இந்திய தேசிய பல்லுயிர் ஆணைய அறிக்கையின்படி தாவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது.  இவை மட்டுமின்றி வன உயிரினங்களிலும் 5 புலிகள் காப்பகங்கள், 5 யானைகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள் என நமது மாநிலம் வனஉயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் பெருமைமிகு பாரம்பரியத்தை, வளத்தை மேம்படுத்துவதே நமது முக்கியப் பணி. 

இந்தியாவிலேயே முதன்முதலாக தேவாங்கு உயிரினத்திற்கென்று காப்பகம் கடவூர் வனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கடல்பசுக்களைப் பாதுகாக்க கடல்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது. கழுவேலி பறவைகள் காப்பகம், அகத்தியர்மலை யானைகள் காப்பகம், நஞ்சராயன் குளம் பறவைகள் காப்பகம், காவேரி தெற்கு காட்டுயிர்க் காப்பகம் போன்றவற்றை அரசு குறுகிய காலத்தில் அறிவித்துள்ளது என்பது பெருமைக்குரியது. நமது பெருமைமிகு பல்லுயிர் வளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்கு இந்த முயற்சிகள் பெருமளவு உதவி செய்யும்.

இன்று “தமிழ்நாட்டினுடைய வன உயிரின வளமை” (Tamil Nadu Wild life Wealth) குறித்த புத்தகத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இச்சிறு புத்தகம் இந்த அரசு மேற்கொண்டு வரக்கூடிய வன உயிரினப் பாதுகாப்பு முயற்சிகளை நாம் அறிந்து கொள்ள பெரிதும் உதவும் என நான் நம்புகிறேன்.  மேலும் யானைகள் உயிரிழப்பு குறித்து அறிவியல் பூர்வமாகத் தகவல்களை தெரிந்துகொள்ளவும், வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும், “யானைகள் இறப்பில் பின்பற்ற வேண்டிய தணிக்கை முறைகள்” (Elephant Death Audit Frame Work) குறித்தும் இங்கு இந்த புத்தகம் வாயிலாக வெளியிடுவதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன். 

இத்தகைய புத்தகம் இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்படுவதாக அறிகிறேன். அதற்கான என்னுடைய பாராட்டுகள். வனவிலங்குகளின் வேட்டை / கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வன மற்றும் வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு நமது அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மாநிலத்தில் 3 மண்டலங்களிலும் குற்றத்தடுப்புப் பிரிவுகள் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு யானைகளைக் கண்காணிக்கும் வனக்காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும், வேட்டைத்தடுப்பு முகாம்களை அமைப்பதற்கும், ஆளில்லா வாகனங்கள்/ ஆளில்லா விமானங்கள் / இரவு பார்வை கேமராக்களை வாங்குவதற்கும், வேட்டைத் தடுப்புப் படைகளை உருவாக்குவதற்கும், யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் என ரூ.2 கோடியே 41 லட்சம் ரூபாயை அனுமதித்துள்ளது.  இது போன்ற ஒரு முறையான அறிவியல் அணுகுமுறை மூலம் மனிதர்-யானை மோதல்களை குறைக்க முடியும்.

இது மட்டுமின்றி வன உயிரின வாழ்விடங்களை மேம்படுத்தும் பொருட்டு, சுமார் 282 எக்டேர் பரப்பளவுள்ள வனப்பரப்பில் அந்நிய களைத்தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பணியானது வனப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெறும் என்பதையும், அதன் மூலம் வன உயிரினங்களின் வாழ்விடங்கள், அதன் ஆரம்ப இயற்கைச் சூழலுக்கு கொண்டுவரப்பட்டு, வாழ்விடங்களின் தரம் மேம்படுத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் நமது அரசு தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டத்தை ரூ.920 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயற்கை வள ஆதாரங்களை அதிகரித்தல், சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வனநிலம் மற்றும் வன உயிரின வாழ்விடங்களின் தரம் குன்றுதலை தடுத்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் நபார்டு நிதி உதவியுடன் தரம் குன்றிய வன நிலப்பகுதிகளை மீளுருவாக்கம் செய்தல், மீளுருவாக்கத் திட்டத்திற்கு ரூ.481 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com