புதுதில்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதில் கடிதத்தை பி.வில்சன் எம்.பி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கட்கரி தனது பதில் கடிதத்தில், ‘சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித் திட்டத்தில் சுங்கச் சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம்.
நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றி, அதற்குப் பதிலாக கேமராக்கள் பொருத்துவதற்கு அரசு தயாராகி வருகிறது. இதற்குப் பிறகு, சுங்கச் சாவடியில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் முடிவுக்கு வரும்.
இதன் மூலம் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் செல்லும் வாகனங்களில் செல்லும் வாகனங்களில் இருந்து சுங்கவரி தானாகவே வசூலிக்கப்படும்.
அரசு இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்க நேரம் ஆகாது. இந்த புதிய முறை அமலுக்கு வந்த பிறகு வாகனங்கள் அதன் வேகத்தை குறைக்கவோ அல்லது எங்கும் நிறுத்த வேண்டிய இருக்காது.
பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சி மற்றும் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என கட்கரி கூறியுள்ளார்.
சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு நன்றி தெரிவித்துள்ளார் வில்சன்.