பரேலி: உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் வாக்குவாதத்தைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகரால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் ரயிலுக்கு அடியில் சிக்கி 2 கால்களையும் இழந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் பரிசோதகர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனுசிங் குமார்(29). ராணுவ வீரரான இவர் தில்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. எனவே, பணியில் சேருவதற்காக பேரலி ரயில் நிலையத்தில் இருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் வருவதற்குள் தாமதமாகியுள்ளது ஆனால், அவர் விரைந்து ஒடி வந்து புறப்பட்ட ரயிலில் தனது முன்பதிவு பெட்டியில் அவசரமாக அவர் ஏற முயன்றுள்ளார்.
அப்போது, அந்த பெட்டியில் இருந்த பயண டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) சுபன் போரே ராணுவ வீரர் சோனுசிங் குமாரை ஏறவிடாமல் தடுத்து வாக்குவாதத்தைத் தொடர்ந்து பரிசோதகர் அவரை கீழே தள்ளிவிட்டு ரயில் பெட்டியின் கதவை திடீரென சாத்தியுள்ளார்.
அதில் நிலை தடுமாற்றிய சோனுசிங் குமார் ஓடிக்கொண்டிருந்த ரயில் பெட்டிகளுக்கிடையே தண்டவாளம் எண் 2 இல் விழுந்தார். இதில் அவரது ஒரு கால் துண்டானது. மற்றொரு கால் நசுங்கி பலத்த சேதம் அடைந்தது.
இதைப் பார்த்ததும் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூச்சலிட்டனர். அதைக் கேட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர்.
பின்னர் தண்டவாளத்தில் ரயில் பெட்டிகளுக்கிடையே பலத்த காயங்களுடன் கிடந்த சோனு சிங் குமாரை வெளியே தூக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பலத்த சேதமடைந்த அவரது 2 கால்களும் வெட்டி துண்டிக்கப்பட்டது.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பரேலி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பரேலி ரயில் நிலையத்தில் சம்பவத்தை நேரில் பார்த்து கொந்தளித்தவர்கள் அங்கிருந்த ரயில்வே ஊழியர்களை அடித்து உதைத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே ராணுவ வீரர் சோனுசிங் குமாரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட பயண டிக்கெட் பரிசோதகர் சுபன் போரே அங்கிருந்து தப்பி ஒடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர் மீது இந்திய இந்திய தண்டனைச் சட்டம் (கொலை முயற்சி) பிரிவு 307-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவ வீரருக்கும், ரயில் பயண டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே பயண டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோபத்தில், ராணுவ வீரரை வெளியே தள்ளியதாகவும், அவர் ரயிலுக்கு அடியில் விழுந்த சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. "அவர் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக" அதிகாரி கூறினார்.