ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பொய்களின் மொத்த தொகுப்பை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.23) சந்தித்துப் பேசியதுடன், திமுக அரசின் மீது புகார் மனுவை ஆளுநரிடம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், கோவை சிலிண்டர் வெடிப்பு உளவுத் துறையின் தோல்வி மட்டுமின்றி காவல்துறையின் அலட்சியத்தையும் காட்டுகிறது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,
ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் என விமர்சித்தார்.