மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏ. கிருஷ்ணன்(91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள்(86). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
வயதான தம்பதியில் கணவர் கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் இருந்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சம்பூரணத்தம்மாள் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வைப்பதற்காக, குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.
சம்பூரணத்தம்மாள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் வீட்டிலிருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணன், சம்பூரணத்தம்மாள் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த உறவினர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த சிறிது நேரத்தில் வயதான கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.