சென்னை: அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மின்தேவை 28,291 மெகாவாட்டாக உயரும் என்று மத்திய மின்சார ஆய்வு (சிஇஏ) அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
20 ஆவது மின்சக்தி ஆய்வின்படி, 2021-22 இல் 16,899 மெகாவாட்டுடன் ஒப்பிடும்போது, மாநிலத்தின் உச்ச தேவை 28,291 மெகாவாட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது; உள்நாட்டு நுகர்வு பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மின்வாரிய ஆணையத்தால், நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடுத்தர மற்றும் நீண்டகால மின் தேவைகள் குறித்து மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மின் தேவை குறித்த 20 ஆவது ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. 19 ஆவது மதிப்பின் முடிவுகள் ஜனவரி 2017 இல் வெளியிடப்பட்டன.
இதில், 2021-22ல் 16,899 மெகாவாட்டுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் உச்ச தேவை(2031-32) 28,291 மெகாவாட் மின்சாரம் தேவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம் 61,575 மில்லியனாக அதிகரிக்கும். அதேபோல் நடப்பாண்டில் 31,606 மில்லியன் யூனிட்டாக உள்ளது. மின்பயன்பாடு விகிதாச்சாரக்கை பொறுத்தவரை தற்போது 34 சதவீதமாக உள்ளது. அவை, அடுத்த பத்து ஆண்டுகளில் (2031-32) 38 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை
தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 18 சதவீதமாக உள்ளது. இது 2031-32 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2031-32 இல் தமிழகத்தின் மின் தேவை 1,75,391 மில்லியன் யூனிட்டாக இருக்கும். உச்ச தேவை 26,662 மெகாவாட்டாக இருக்கும்.
மேலும், விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 16 சதவீதமாகவும், 2031-32 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருக்கும். வர்த்தக பயன்பாட்டை பொறுத்தவரை 2021-22 ஆம் ஆண்டில் 8 சதவீதமாகவும், 2031-32 ஆம் ஆண்டில் 21 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறையின் கொள்கைக் குறிப்பின்படி, வழக்கமான மூலங்களிலிருந்து மொத்த நிறுவப்பட்ட திறன் 16,652.20 மெகாவாட் ஆகும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சொந்த அனல் மின் திறன் 4,320 மெகாவாட் மற்றும் மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் 6,972 மெகாவாட் ஆகும். 2030ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.