திருச்சி அருகே அரசு சொகுசுப் பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து 10 பேர் காயம்
சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற அரசு சொகுசு பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற அரசு சொகுசு பேருந்து, நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு புறப்பட்ட அரசு சொகுசு பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை கடந்து திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நடுப்பட்டி என்னும் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து மேம்பாலத்தினை கடந்து கீழே இறங்கும்போது வளைவு இருப்பது தெரியாமல் நேராக சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு பகுதியில் மோதியுள்ளது.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த பேருந்து சாலையோர பள்ளத்திற்குச் சென்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பேருந்து பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.