தம்மம்பட்டி அருகே புறா பிடிக்கச் சென்றவர், மின்வேலியில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செங்கொடிநகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் கொடிவேல் (56). இவர், நேற்று இரவு செந்தாரப்பட்டியை அடுத்துள்ள, மண்மலை பாலக்காடு, கூக்கங்காட்டில் சங்கர் (63) என்பவரது தோட்டத்தில், கிணற்றில் பதுங்கி இருக்கும் புறாக்களை பிடிக்கச் சென்றார்.
அங்கு, சோளப்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்யாமல் காப்பாற்ற, சங்கர், வயலைச் சுற்றி கம்பிவேலி அமைத்து, அதில் மின்சாரம் கொடுத்து வைத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அதை கவனிக்காமல் சென்ற கொடிவேல், மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, தம்மம்பட்டி காவல் துறையினர், கொடிவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விவசாயி சங்கரை கைது செய்தனர்.