சென்னை: அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவோருக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
உரிய காலத்துக்குள் சொத்து வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், 2022-23ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத அபராதத் தொகையையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க.. விவாகரத்து முடிவைக் கைவிடும் தனுஷ் - ஐஸ்வர்யா?
இவர்களுக்கு மட்டுமல்ல, அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத மக்களுக்கும் இந்த ஆண்டு மட்டும் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், இதுவரை 6.90 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தியிருப்பதாகவும், 6.25 லட்சம் பேர் செலுத்தாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை சொத்து வரிக்கு எதிராக 12,300 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 10 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டதால் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஆனால், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த தாமதமாகும்பட்சத்தில் அவராதம் தள்ளுபடி செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.