
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு பருவ மழையைவிட வடகிழக்கு பருவ மழையை சிறப்பாக எதிர்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழக்கத்தைவிட கூடுதலாக 35 முதல் 75 சதவிகிதம் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து விரைவாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 1,400 இடங்களில் மழை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மழை பாதிப்பு ஏற்பட்டால், நிவாரண முகாம்களில் மக்களை தங்க வைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்கும் மக்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.