சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆனால், 2 ஜி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ல் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து 2ஜி வழக்கு விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஆ.ராசா, அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேர் மீது கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்கள் என ஒரே நேரத்தில் தில்லியில் 20 இடங்களிலும் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி தற்போது சிபிஐ சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.