சேலத்தில் மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி வேலநகர் தெருவில் ராஜசேகரன்(42) அவரது மனைவி கார்த்திகை தேவி(35) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்தி என்ற மகள்(10) உள்ளார். சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார் ராஜசேகரன்.
இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டில் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் மனைவி கார்த்திகை செல்வியை கொலை செய்துவிட்டு கணவர் ராஜசேகரன் வீட்டிலிருந்து தப்பியோடி உள்ளார். அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுந்துள்ளார்.
வீட்டின் அருகிலிருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகை செல்வி சடலமாகக் கிடந்துள்ளார். உடனே இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கணவர் ராஜசேகரனை பிடித்தால் தான் உண்மை தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ராஜசேகரனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.மேலும் அருகில் உள்ள உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.