ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ குழு மட்டுமே முடிவு எடுத்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஒரு போதும் நான் தலையிட்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது . இந்நிலையில், ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கருத்துகளை சொல்லக் கூடிய அளவுக்கு நான் படித்தது கிடையாது. என்ன பரிசோதனை, எந்தந்த மருந்துகள் தர வேண்டும் என்று மருத்துவ குழுவினரே முடிவு செய்தனர். ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை தர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. வெளிநாட்டுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றுமே தடையாக இருந்ததில்லை. எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் அன்றைய சூழலில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவையில்லை என்று முடிவெடுத்தனர். ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.