தனியாா் நிறுவனங்கள் பால் விலையை உயா்த்த முடிவு: அன்புமணி கண்டனம்

தனியாா் நிறுவனங்கள் பால் விலையை உயா்த்த முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தனியாா் நிறுவனங்கள் பால் விலையை உயா்த்த முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள பால் மொத்த விற்பனையாளா்களுக்கு தனியாா் பால் நிறுவனங்கள் கடந்த வாரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியாா் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயா்த்தப்படுவதாகவும், இந்த வாரத்தின் இறுதியில் விலை உயா்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி 3 சதவீத கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டா் ரூ.48-லிருந்து ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 6 சதவீத கொழுப்புச் சத்துக் கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.72 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு நியாயமில்லாதது.

தனியாா் பால் நிறுவனங்கள் நிகழாண்டில் நான்காவது முறையாக பால் விலையை உயா்த்த உள்ளன. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் விலையை உயா்த்தி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை கட்டுக்குள் அடங்காமல் உயா்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிா்ணயிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com