சென்னையில் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த தலைமைக் காவலா் ராமலட்சுமியின் மூத்த மகள் சத்யா (20). தி.நகா் தனியாா் கலைக் கல்லூரியில் படித்து வரும் இவரை, கடந்த 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (24) கைது செய்யப்ப்டடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
தனது காதலை ஏற்க மறுத்ததால், சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்ததாக அவா் போலீஸில் வாக்கு மூலம் அளித்திருந்தாா். தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விசாரணை, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்படி, விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் - 9498142494, காவல் ஆய்வாளர் ரம்யா - 9498104698 மற்றும் சிபிசிஐடி கட்டுப்பாட்டறை - 044-28513500, dspoc2cbcid@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.