தூத்துக்குடி: குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க, தூத்துக்குடி பாளை., ரோட்டில் எம்.ஜி.ஆர் பூங்கா அருகே கிழக்கு பக்கத்தில் 20 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க, தூத்துக்குடி ரோச் பூங்காவில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பரதர் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடி ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்து மணிமண்டம் மற்றும் சிலை அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக தூத்துக்குடி பாளை., ரோட்டில் எம்.ஜி.ஆர்., பூங்கா அருகே கிழக்கு பக்கத்தில் 20 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இடத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலையை அகற்றும் திட்டம் எதுவுமில்லை. வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இதுகுறித்து தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து அனுமதி கோரப்படும். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாக அனுமதியும் பெறப்படும். இந்த பணிகள் முடிந்த பின்னர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.