கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக உடல் உறுப்பு தானம் செய்த காவேரி மருத்துவமனை
ஒசூர்: ஒசூர் காவேரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டன.
ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற ரயில்வே ஊழியர் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. ரயில்வே மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக ஒசூர் காவேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது நிலை தொடர்ந்து மோசமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.
பின்னர் அரசின் வழிகாட்டுதலின்படி, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பிரபாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அனுமதி பெறப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் கருவிழி போன்ற உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது முதல் உடல் உறுப்பு தானம் ஆகும். உன்னத செயலின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாக காவேரி மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை மேலாளர் ஜான்சன் கூறினார். மேலும், உறுப்பு தானம் பற்றிய முதல் நிகழ்வு இங்குள்ள பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் குறித்து பேசிய ஒசூர் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எஸ்.விஜயபாஸ்கரன் கூறுகையில், 'பிரபாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த உறுப்பு தானம் நிச்சயமாக பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும், இதன் மூலம் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு உதவும். அவர்கள் புதிய வாழ்வைப் பெற முடியும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.