காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நவ.11ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் 34-வது பட்டமளிப்பு விழா கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டம் வழங்கினார். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழாவை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பல்கலை. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நவ.11 ஆம் தேதி அந்த பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு காந்திகிராம பல்கலை.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். தஞ்சை சாஸ்தரா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தர்மேந்திர பிரதான், காந்திகிராம பல்கலை.க்கும் வந்து சென்றார். அவரது வருகை, பிரதமரின் வருகைக்கான முன்னோட்டமாக கூறப்பட்டது.
இதையும் படிக்க: காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவில் 47 பேர் நியமனம்
கடந்த 5 நாள்களாக பிரதமர் வருகை தொடர்பாக பல்கலை. வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை(அக்.26) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் பல்கலை. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக பல்கலை. சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.