இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்தவர்கள் நடுரோட்டில் போலீஸ்காரரை விரட்டி விரட்டி அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அசோக்(30). இவர் ரோந்து வாகன ஓட்டுநராக உள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாதாரண உடையில் இரு சக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது 3 இரு சக்கர வாகனத்தில் 5 பேர் மோதுவதுபோல வேகமாக வந்தனர். இதனை பார்த்த காவலர் அசோக் அவர்களை கண்டித்தார். இதனால் காவலர் அசோக்குக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென காவலர் அசோக்கை இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் தாக்கினர். அப்போது அவர் நான் காவலர் என்று கூறியுள்ளார். அதை கேட்காமல் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவரை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த காவர்கள் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதற்கிடையே வாலிபர்கள் தாக்கியதில் காவலர் அசோக்கின் கை முறிந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான்(20), ரியான்பாஷா(19), அஸ்லாம்அலி(20), ரிகான்பாஷா (20) ஆகியோரை கைது செய்தனர். ரிஸ்வான் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
இதில் கைதான அப்துல்ரகுமான், 53 ஆவது வார்டு கவுன்சிலர் ஷாதாஜ் என்பவரின் மகன் ஆவார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காவலரை துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரை ஐந்து பேர் சுற்றிக்கொண்டு அவர் ஓட ஓட தாக்குவதும் விடாமல் துரத்திச் சென்று அடிக்கும் காட்சிகள் சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த விடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.