சிக்கல் சிங்காரவேலவர் கோயில் திருத்தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் கோயிலின் கந்தசஷ்டி விழா திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
சிக்கல் சிங்காரவேலவர் கோயில் திருத்தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் கோயிலின் கந்தசஷ்டி விழா திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

சிக்கல், ஸ்ரீநவநீதேசுவர சுவாமி திருக்கோயிலில் தனி சந்நிதி கொண்டு காட்சியளிக்கிறார் ஸ்ரீசிங்காரவேலவர். சூரனை சம்ஹாரம் செய்ய இறைவன் முருகப் பெருமான் இத்தலத்தில், தாய் வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெற்றார் என்பது ஐதீகம். 

இதன்படி, இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதில், சிங்காரவேலவர் வேல் வாங்கும் விழா மிகுந்த முக்கியத்துவம் பெறும். அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் வாங்கிய சிங்காரவேலவரின் திருமுகத்தில் வியர்வைப் பொழியும் ஆன்மிக அதிசயத்தைக் காண இங்கு ஆயிரக்கணக்கானோர் திரளுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 25) காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. தினமும், காலையில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் சிங்காரவேலவர் புறப்பாடு நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணி அளவில் ஸ்ரீசிங்காரவேலவர் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலை 7.15 மணிக்கு திருத்தேருக்கு வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்தனர்.

வேல் வாங்கும் நிகழ்ச்சி

இன்று இரவு 7.30 மணி அளவில் ஸ்ரீசிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சிங்காரவேலவரின் திருமுகத்தில் வியர்வைப் பொழியும் ஆன்மிக அற்புதக்காட்சியும் நடைபெறும். இரவு 12 மணி அளவில் ஸ்ரீசிங்காரவேலவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com