கோவையில் காா் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் ஆளுநர் புகாருக்கு ஆதாரம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாக உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் பொறுப்பற்ற முறையில் மாணவர்கள மத்தியில் பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாக புகார் கூறியுள்ளார். கோவை இயற்கை மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வில், மாணவர்கள மத்தியில் பேசிய ஆளுநர் எதன் அடிப்படையில் புகார் கூறினார்?
கோவையில் கடந்த 23, ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் தீயில் கருகி இறந்தார். அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநரும், காவல்துறை தலைமை இயக்குநரும் ஒரு சில மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்துள்ளனர். கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தனிப்படைக் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் முதல்வர், உயர்நிலைக் கூட்டம் நடத்தி, கோவை குற்றம் சம்பவத்தின் விசாரணை எல்லைகளை கருத்தில் கொண்டு வழக்கை தேசிய புலானாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிக்க | தங்கம் விலை... இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
இதன் தொடர்ச்சியாக அலுவல் சார் நன்முறைகள் உடனடியாக தொடங்கின. இது தான் நிலை என்கிற போது, எங்கே தாமதம் ஏற்பட்டது? சாட்சியங்கள் மறைக்கப்படும், அழிக்கப்படும் வாய்ப்பு எங்கே ஏற்பட்டது? ஆளுநர் புகாருக்கு ஆதாரம் என்ன?
கார் சிலிண்டர் வெடிப்பில் மரணமடைந்த ஜமேஷா முபீனிடம் 2019 ஆம் ஆண்டு என்ஐஏ விசாரணை அதிகாரிகள் விசாரித்துள்ளனர்? என்ஐஏ விசாரணை வளையத்தில் இருந்து, கண்காணிப்பு எல்லைக்குள் இருந்தார். அவர் எப்படி சுதந்திரமாக நடமாட முடிந்தது என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் விளக்கம் கூற வேண்டும்.
இதுபோன்ற கேள்விகளை கருத்தில் கொள்ளாமல், அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட, உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி, மலிவான அரசியலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று முத்தரசன் கூறியுள்ளாா்