தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையம் தொடங்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் மருத்துவப் படிப்புக்கான முதலாம் ஆண்டு பாடத் திட்டம் மொழிபெயர்ப்புப் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. அதன்படி, 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்' என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.