திருவனந்தபுரம்: ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளளதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான மத்திய அரசின் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.