

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையில் வழக்கு விசாரணையை 3 வாரம் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதிமுக பொது செயலாளார் வைகோ , உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு பொட்டிபுரம் பகுதி மலையில் சுமார் 1,000 மீ. ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மலைப்பகுதி கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான்சோலை தேசியப் பூங்கா முதல் பெரியாறு வரையிலான புலிகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
சுரங்கம் தோண்டுவதாலோ பாறைகளைப் பெயர்த்தெடுப்பதாலோ அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், புலிகள் வழித்தடத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என இந்த ஆய்வகத்தின் திட்ட இயக்குநர் கூறுகிறார். ஆனால் சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். வன பகுதியில் உள்ள வன உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த பொது நல மனு நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.
இதை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. எனவே, வழக்கு விசாரணையை 3 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.