வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் இன்று காலை 10.00 மணிக்கும், 06.09.2022 அன்று காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்!தற்சார்பு - தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.