மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதை இலவசமாக நினைக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தார். பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கேஜரிவால் முதல்வர் மட்டும் அல்ல. அவர் ஒரு போராளி. இந்திய வருவாய்த்துறை பணியை உதறிவிட்டு அரிசியலுக்கு வந்தவர். என்னுடைய அழைப்பை ஏற்று திட்டத்தை தொடங்கி வைக்க தமிழகம் வந்த முதல்வர் கேஜரிவாலுக்கு நன்றி. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெறுவார்கள். புதிய முன்முயற்சிக்காக வரவு செலவு திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- வ. உ. சிதம்பரனாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். ஒரு லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை இன்றே வழங்கப்பட்டது. பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.25 கோடியில் சேதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும். 7ஆய்வகங்கள், 3 நூலகங்கள் உள்ளிட்ட 3 அடுக்கு கட்டடம் கட்டப்படும். காமராஜர், அண்ணா, கருணாநிதி வழியில் திராவிட ஆட்சி நடைபோட்டு வருகிறது.
படிக்க வைக்க பணம் இல்லையே என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது. அனைருவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதை இலவசமாக நினைக்கவில்லை. அதனை அரசு கடமையாக கருதுகிறது. புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும். திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.