கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையிலான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பாதயாத்திரை புதன்கிழமை மாலை தொடங்குகிறது.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் சுமார் 3500 கி.மீ. நடைப்பயணத்தை 150 நாள்கள் மேற்கொள்ளவுள்ளார். இதில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 400 பேர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்விற்காக இன்று இரவு 8 மணிக்கு சென்னை வரும் ராகுல் காந்தி, நாளை காலை 7 மணிக்கு சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை திரும்பும் ராகுல் காந்தி, காலை 11.40 மணியளவில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் சிலைக்கு செல்லும் ராகுல் காந்தி, காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உரையாடுகிறார்.
காந்தி மண்டபத்திற்கு அருகே ராகுல் காந்தியின் நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து சுமார் 700 மீட்டர் நடந்து சென்று பொதுக்கூட்ட மேடையை ராகுல் காந்தி அடையவுள்ளார்.
மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து கன்னியாகுமரியில் இரவு தங்கும் ராகுல் காந்தி, வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்குகிறார். நாள்தோறும் காலை 4 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
பகல் நேரங்களில் உள்ளூர் அரசியல் தலைவர்களையும், மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரவு நேரங்களில் அன்றைய பாதயாத்திரை நிறைவடையும் பகுதியிலேயே ராகுல் காந்தி தங்குகிறார்.
தமிழகத்தில் மொத்தம் நான்கு நாள்கள் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளது.