பெங்களூரு: கனமழை காரணமாக, பெங்களூருவின் பல பகுதிகளில் கடும் வெள்ளம் தேங்கியுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவும் மழை கொட்டியதால், செவ்வாயன்றும் அதே நிலை நீடிக்கிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி இரவும் பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, வாகனங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர், படகு மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடந்து வருகிறார்கள்.
இது குறித்து மக்கள் கூறுகையில், எங்களது வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. டிராக்டரில் ஏறித்தான் அலுவலகம் வந்தோம் என்கிறார்கள்.
இதையும் படிக்க.. விபத்தில் சிக்கிய சைரஸ் மிஸ்திரி வந்த காரின் அதிர்ச்சி தரும் வேகம்
பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவியோ, நாளைக்கு பள்ளித் தேர்வு. அதனால் படகில் ஏறி பள்ளிக்கு வந்தேன் என்கிறார்.
நேற்று இரவும் கனமழை கொட்டியதால் வெள்ளம் வடியவில்லை. சொல்லப்போனால் அதிகரித்துள்ளது. நான் அலுவலகம் செல்ல வேண்டும். பிள்ளைகளும் பள்ளிச் செல்ல வேண்டும். எப்படியோ ஒரு டிராக்டர் வந்தது. அதில் ஏறி வந்துவிட்டோம். இந்த மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பெங்களூரு வெள்ளம் காரணமாக பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துவிட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடீவு செய்துள்ளன.
அவுட்டர் ரிங் ரோடு, சர்ஜாபூர் சாலை, சில தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் மிகப்பெரிய ஏரிகள் போல காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி நின்று போன தங்களது வாகனங்களை வாகன ஓட்டிகள் தள்ளிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் கால் முட்டியளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது.