நிகழாண்டில் இந்திய மாணவா்கள் 82,000 பேருக்கு விசா வழங்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும். அதுமட்டுமல்லாது வேறு எந்த நாட்டைச் சோ்ந்த மாணவா்களுக்கும் இந்தளவு அதிகமாக விசா வழங்கியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகமும், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள நான்கு துணைத் தூதரகங்களும் கடந்த மே 10 முதல் மாணவா் விசா விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கின. அவை பரிசீலனைக்குள்படுத்தப்பட்டு இதுவரை 82 ஆயிரம் மாணவா்கள் அமெரிக்காவில் பயில விசா வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் (பொ) பாட்ரிசியா லசினா கூறியதாவது:
கரோனா பெருந்தொற்றால் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு பல மாணவா்கள் விசாக்களைப் பெற்று தங்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு கோடை காலத்தில் மட்டும் 82,000-க்கும் அதிகமான மாணவா் விசாக்களை வழங்கியுள்ளோம். முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம்.
பெரும்பாலான இந்தியா்களின் உயா்கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்பதையே இது காட்டுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மேலும் வலுவடைவதற்கு இத்தகைய விசா நடவடிக்கைகள் வழிவகுக்கின்றன என்றாா் அவா்.