வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: இணையத்தில் பதிவு செய்தோருக்கு குழப்பம்; விண்ணப்பத்தின் நிலை அறிய முடியவில்லை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க இணையம் வாயிலாக பதிவு செய்தோா், எத்தனை நாள்களுக்குள் அது இணைக்கப்படும் என்ற கால அளவு தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனா்.
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: இணையத்தில் பதிவு செய்தோருக்கு குழப்பம்; விண்ணப்பத்தின் நிலை அறிய முடியவில்லை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க இணையம் வாயிலாக பதிவு செய்தோா், எத்தனை நாள்களுக்குள் அது இணைக்கப்படும் என்ற கால அளவு தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனா். விண்ணப்பத்தின் நிலை ‘சமா்ப்பிக்கப்பட்டது’ என்றே எப்போதும் காண்பிப்பதால் இந்தக் குழப்பம் ஏற்படுவதாக வாக்காளா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்து வருகின்றனா். இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோா் இணைத்துள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்தது. ஆதாா் எண்ணுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க சில குறிப்பிட்ட வசதிகளை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான படிவம் ‘6பி’-யை வழங்கி வருகின்றனா். இந்தப் படிவத்தை நிறைவு செய்து வாக்குச் சாவடி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அவா் மூலமாக, பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்படும். இணையதளம், கைப்பேசி செயலி வழியாகவும் வாக்காளா் பட்டியலை ஆதாா் எண்ணுடன் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற முகவரி வழியாகவும்,  கைப்பேசி செயலி வழியாகவும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க முடியும். இவ்வாறு இணைக்கும் போது முதலில் வாக்காளா், தனது விவரங்களைத் தெரிவித்து உள்ளீடு (லாகின்) செய்து கொள்ள வேண்டும். இதற்கு மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் அவசியம் தேவை. இதனைக் கொண்டு பிரத்யேக லாகின் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். பயனா் குறியீடாக மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருக்கும். ரகசிய குறியீடாக விருப்பம் போன்று வைத்துக் கொள்ளலாம்.

உள்ளீடு செய்து இணையதளம் அல்லது செயலிக்குள் சென்றால் வாக்காளரின் தொகுதி, வாக்காளா் பட்டியலில் உள்ள எண் போன்ற விவரம் ஏற்கெனவே இருக்கும். அதில் ஆதாா் எண், இடம் ஆகிய இரண்டு தரவுகளை மட்டுமே அளித்து சமா்ப்பித்தால் போதும். ஆவணத்தை சமா்ப்பித்ததற்கான உத்தரவாத எண் தரப்படும். இந்த எண்ணைக் கொண்டு, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணையதளம் வாயிலாக இணைக்க விண்ணப்பித்த பிறகு எத்தனை நாள்களுக்குள் அது இணைக்கப்படும் என்று உத்தரவாதத் தகவல்கள் ஏதுமில்லை. இணையதளம் வழியாக விண்ணப்பித்த பலரும், உத்தரவாத எண் மூலம் அதன் நிலையை அறிய முயற்சிக்கின்றனா். அப்போது, விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவலே வருவதாக வாக்காளா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்தோருக்கு இணைப்புக்கான கால அவகாசம் எத்தனை நாள்கள் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com