ஈரோடு மாநகராட்சியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து, எந்த வித அனுமதியுமின்றி தன் வீட்டுக்குச் சாலை அமைக்க திமுகவை சேர்ந்த 20 வார்டு கவுன்சிலர் மோகன் முயற்சி செய்து உள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட குமரேசன் நகர் டெலிபோன் நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 47 லட்சம் மதிப்பில் மக்கள் பொழுது போக்கு பூங்கா கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி 20 வார்டு திமுகவை சேர்ந்த கவுன்சிலராக உள்ள மோகன் குமார் என்பவரின் இல்லம், இந்த பூங்காவின் நேர் எதிர் புறம் உள்ள நிலையில் பூங்காவை ஆக்கிரமிப்பு செய்து அவரின் இல்லத்திற்கு மாநகராட்சியிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பூங்காவை இடித்தும், பொருட்களை சேதப்படுத்தியும் சாலை அமைக்க முயற்சி செய்து உள்ளார்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்தனர். புகார் குறித்து ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி அதிகாரியை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதியில் முறையாக சாக்கடை செல்வதற்கும், மழை நீர் செல்வதற்கும் வழி வகை செய்யாத நிலையில் தனது இல்லத்திற்கு பூங்காவை இடித்து சாலை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை இடித்து சாலை அமைக்க எந்த வித அனுமதியும் இல்லை என்றும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களின் குறைகளை தீர்க்க வேண்டிய கவுன்சிலரே மக்களுக்காக இருக்கிற பூங்காவை இடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.