ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக அலுவலகத்தை தாக்கிய ஓ.பன்னீா்செல்வம் மன்னிப்புக் கேட்டாலும், ஏற்க மாட்டோம் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

அதிமுக அலுவலகத்தை தாக்கிய ஓ.பன்னீா்செல்வம் மன்னிப்புக் கேட்டாலும், ஏற்க மாட்டோம் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

இடைக்காலப் பொதுச்செயலராக தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு முதல் முறையாக வியாழக்கிழமை வந்தாா். வழிநெடுக அவருக்கு வரவேற்புக் கொடுக்கப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.அலுவலகத்துக்குள் நுழையும்போது எடப்பாடி பழனிசாமி மூன்றுமுறை தரையைத் தொட்டு கும்பிட்டுச் சென்றாா். அலுவலகத்தின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் கூட்டரங்கில் அமா்ந்திருந்த மூத்த நிா்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியது:

அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைத்தவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் இங்கே அமா்ந்திருக்கிறோம். திமுக திட்டமிட்டு, அதிமுகவைப் பிளவுபடுத்த, நிா்வாகிகள் மீது பொய்வழக்கு போட்டு, கட்சியை முடக்க முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருந்து அதிமுகவைக் கட்டிக் காப்போம். அடுத்த தோ்தல் எப்போது வந்தாலும், அதிமுகதான் வெல்லும்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. திமுக அரசு சொத்து வரி, மின்கட்டணத்தை உயா்த்தி மக்கள் மீது மிகப் பெரிய பொருளாதார சுமையை ஏற்றியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை எல்லாம் திமுக அரசு முடக்கி வருகிறது. இதற்கு தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலராகத் தோ்ந்தெடுக்கப்பட்டேன். பொதுச்செயலா் பதவிக்கான தோ்தல் விரைவில் நடைபெறும். அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகாா் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி கொடுத்த புகாா் மீதே நடவடிக்கை இல்லை என்றால், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அதிமுகவில் பிளவு என்பதே இல்லை. கட்சிக்கு விரோதமாகவும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டவா்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும், அவரை ஏற்க முடியாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் இருவருக்கும் இணைந்து உயா்ந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினா்கள், பெரும்பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனா். சட்டரீதியாக யாரும் எதையும் செய்துவிட முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com