மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் நீர் திறப்பும் 80,000 கனஅடியாகக் குறைந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 1.25 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 80,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அங்குள்ள
அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.
இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் வினாடிக்கு 80,000 கன அடியாக உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 57,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 98.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 80,000 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால் காவிரி பாயும் 12 டெல்டா மாவட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.