புதுச்சேரியில் அபார்ட்மெண்டில் வாட்ச்மேனாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ.12 லட்சம் மின் கட்டண பில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின் துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன், இவர் வரதராஜு என்பவரது வீட்டில் வாடகைதாரராக உள்ளார்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி
இதே பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு மின் கட்டணம் மாதம் ரூ. 800க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங்கில் ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது.
ஆனால், இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என வந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டார். தவறுதலாக அச்சாகியுள்ளது இதை சரிசெய்து தரப்படும் என உறுதியளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.