

தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பருவமழை காரணமாக ஏற்படும் காய்ச்சல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததாலும், முகக்கவசம் பயன்படுத்தப்பட்டதாலும் பாதிப்பு குறைபாகவே இருந்தன. ஆனால், இந்தாண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர். மேலும், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவின.
இந்நிலையில், எழும்பூர் மருத்துவமனையில் இன்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 121 குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சலே உள்ளது. தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், டெங்கு காய்ச்சலால் 243 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காய்ச்சல் பரவல் தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.