ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சிறுவன்: முதல்வரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்தும் ஏமாற்றம்!

ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சிறுவன் நாக விஷால், மதுரையில் முதல்வரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்தார். 
ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சிறுவன்: முதல்வரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்தும் ஏமாற்றம்!

ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சிறுவன் நாக விஷால், மதுரையில் முதல்வரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்தார். 

இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை வைகைக் கரையோரம் உள்ள ஆதிமூலம் அரசு தொடக்கப்பள்ளியில் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது 'கே.டி. என்ற கருப்பு துரை' திரைப்படத்தில் நடித்த சிறுவன் நாக விஷால் முதல்வரைக் காண்பதற்காக தாயார் மைதிலியுடன் காத்திருந்தார்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் நடைபெறும் ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு உள்ளே இவர்களை அதிகாரிகள் அனுமதிக்காததால் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.

முதல்வரிடம் ஆசி பெறுவதற்காக வந்திருப்பதாக அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். சிறிய நிறுவனங்கள் முதல்  குடியரசு துணைத் தலைவர் வரை பலரிடமும் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்களைக் காண்பித்தும் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

பின்னர் பள்ளியை விட்டு முதல்வர் வெளியே வந்தவுடன் கூட்டத்துடன் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு குடியரசு துணைத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற புகைப்படம் மற்றும் பல விருதுகள் அடங்கிய புகைப்படங்களை காண்பித்தனர். ஆனால் முதல்வர் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் கொடுத்த புகைப்படம் மற்றும் முதல்வரைக் காண அவர்கள் வழங்கிய மனுவையும் பெற்று பின்னால் இருந்த அதிகாரியிடம் முதல்வர் கொடுத்து விட்டார். 

 இதுகுறித்து நடிகர் நாக விஷாலின் தாய் மைதிலி கூறும் போது, 'என் மகன் 'கே.டி. என்ற கருப்புதுரை' படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தேசிய விருது பெற்றுள்ளார். இதே மேடையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்கும் தேசிய விருது. வழங்கப்பட்டது. மதுரையில்  பிறந்து ஏழ்மையான சூழ்நிலையிலும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எனது குழந்தையை வளர்த்து, அவரது திறமையை வெளிக்கொண்டுவரும் வகையில் திரைப்படத்தில் நடிக்க வைத்து இன்று தேசிய விருது பெறும் அளவிற்கு நாகவிஷால் உயர்ந்துள்ளார். தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தேசிய விருது பெற்றிருந்தாலும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவதே எங்களுக்கு மிகப்பெரிய விருது என்று எண்ணி பலமுறை அவரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை.

நாங்கள் கடந்த ஒரு வருடமாக முதல்வரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என பல்வேறு கட்ட முயற்சிகளை செய்தும் இதுவரை பலனில்லை. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு பலமுறை விண்ணப்பித்தும் அதிகாரிகள் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர்.

இன்று எங்கள் ஊரான மதுரைக்கு வந்த முதல்வரை சந்தித்து விடலாம் என நானும் எனது மகனும் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை, பின்னர் முதல்வர் செல்லும் வாகனத்தை அருகில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று எனது மகன் வாங்கிய விருது மற்றும் விருதுகள் அடங்கிய புகைப்படங்கள், நாங்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று எழுதிய கோரிக்கை மனுவையும் கொடுத்தான். ஆனாலும் அவரிடம் வாழ்த்து பெற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்களின் கோரிக்கை முதலமைச்சரின்  கவனத்திற்கு கொண்டு சென்று அவரிடம் வாழ்த்து பெற வாய்ப்பு வழங்க உதவுங்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com