தாய் நாட்டை பாதுகாப்பது போல, கடல் தாயையும் போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் பள்ளியில் இருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் முருகன், 8 ஆயிரம் கி. மீ. பரந்து விரிந்துள்ள இந்திய கடற்கரையில் எண்ணற்ற வளங்கள் பொதிந்து கிடக்கின்றது. கடலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்க பிரதமர் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேலோ இந்தியா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டு மைதானம் என்பதை எடுத்துக்காட்டாக கூறலாம்.
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாராத்தான் போட்டி.
கரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதும், கடல்சார் பொருள்கள் உற்பத்தி அதிகமாகவே இருந்தது. இத்தகைய கடல் அன்னையை தாய் நாட்டை போன்று போற்றி பாதுகாக்க வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை அளிக்க வேண்டும். எனவே, கடலை, கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 100 ஆவது சுதந்திர நாளில் இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் 75 கடற்கரை பகுதிகளில் கடந்த ஜுலை மாதம் 5-ஆம் தேதி முதல், கடலோர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் இன்று வழங்கினார்.
தொடர்ந்து கடலிலோ, கடற்கரை பகுதியிலோ பிளாஸ்டிக் மட்டுமின்றி, இதர குப்பைகளையும் போடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய இணையமைச்சர் முருகன் பரிசுகளை வழங்கினார்.