ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிகாலையில் புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் மனைவியுடன் திங்கள்கிழமை காலை பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.பி.கே புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன்( 55). இவருக்கு கொத்தங்குளம் அருகே சொந்தமாக ஸ்பின்னிங் மில் மற்றும் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். அவரது மனைவி ராமலட்சுமி(46). இவர்கள் இருவரும் பெங்களூரில் படித்து வரும் மகனை அழைத்துக் கொண்டு, மதுரை சென்று மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மகள் சிந்துஜாவையும் அழைத்துக் கொண்டு மகனை மதுரையில் பேருந்து ஏற்றிவிட்டு, பின்னர் இறுதி ஆண்டு படித்து வரும் மகள் சிந்துஜாவுடன் காரில் எம்.பி.கே புதுப்பட்டி வர திங்கள்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் மதுரையில் இருந்து கிளம்பி வந்தனர்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆவின் பாலகம் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் புளிய மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தானகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவரது மகள் சிந்துஜா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் .
இந்த விபத்து பற்றி அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் விரைந்து சென்று காயமடைந்த சிந்துஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சந்தானகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக நகர் காவல் துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காயம் அடைந்த சிந்துஜா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: சென்னை உயர்நிதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்
காயமடைந்த சிந்துஜாவின் கணவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக அதிகாலையில் புளிய மரத்தின் மோதி தொழிலதிபரும், அவரது மனைவியும் இறந்த சம்பவம் எம்.பி.கே புதுப்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.