‘ஆப்’ மூலம் 2-வது திருமணம்: முதலிரவன்றே பணம், நகையுடன் மாயமான பெண்

சேலத்தில் திருமண செயலி மூலம் லாரி ஓட்டுநரை இரண்டாவது திருமணம் செய்த பெண் முதலிரவன்றே பணம், நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவிதா
கவிதா
Updated on
1 min read

சேலத்தில் திருமண செயலி மூலம் லாரி ஓட்டுநரை இரண்டாவது திருமணம் செய்த பெண் முதலிரவன்றே பணம், நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி ஊராட்சியிலுள்ள சாணாரப்பட்டியில் வசிக்கும் லாரி ஓட்டுநர் செந்தில் (48) என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த 11 மாதத்திற்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால் ‘ஜோடி ஆப்’ மூலம் 2-வது திருமணம் செய்துகொள்ள பதிவு செய்துள்ளார்.

அதே ‘ஜோடி ஆப்’பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் பதிவு செய்த நிலையில், லாரி ஓட்டுநர் செந்திலும், கவிதாவும் செல்போனில் பேசி வந்ததாகவும், அப்போது கவிதா தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாகவும் செந்திலை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தேவைப்படும்போது செந்திலிடம் பணத்தை சுருட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி செந்தில் சேலம் வந்த கவிதாவை அங்குள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, எடப்பாடி சாணாரப்பட்டியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். முதலிரவன்றே 4  1/2 பவுன் நகை, வெள்ளிக்கொழுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை சுருட்டிக்கொண்டு கவிதா தப்பிச்சென்றுள்ளார்.

தொடர்ந்து கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். மேலும், கவிதா தரப்பிலிருந்து 2 வழக்கறிஞர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி செந்திலிடம் பணம், நகையை திருப்பித் தருவதாக கூறி சமாதானம் செய்து விட்டு எதுவுமே திருப்பி தராமல் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்ததின் பேரில் நேற்று கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செந்தில் கூறும்போது, தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் ‘ஜோடி ஆப்’ மூலம் 2வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும், இதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். என்னிடமிருந்து கவிதா திருடிச்சென்ற பணம் நகைகளை திரும்ப பெற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் ஏமாற்றிய பெண் பேசிய ஆடியோ மற்றும் புகைப்படம், வங்கிகணக்கிலிருந்து பணம் அனுப்பிய ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com