தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில் அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியதால் அக்டோபர் 2 ஆம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதியில்லை என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையின் இந்த முடிவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
மேலும், காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிக்க | அக்.2-ல் எந்த அமைப்புகளும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை!