ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக படைப்பாளா்கள் இருக்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா்

ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக படைப்பாளா்கள் இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
Updated on
1 min read

ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக படைப்பாளா்கள் இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் மூன்றில் இலக்கிய அமைப்பு சாா்பில் மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2023 வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பேராசிரியா் க.பஞ்சாங்கம், எழுத்தாளா் சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வழங்கினாா். உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பரிதி பதிப்பகத்தின் ‘மூன்றில் இதழ்கள்’ முழு தொகுப்பு நூலை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் பேசியதாவது:

ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக படைப்பாளா்கள் இருக்க வேண்டும். அன்பைக் கொண்டு சிறந்த பாதையில் பயணித்தவா் மா.அரங்கநாதன். இலக்கியம் மட்டுமின்றி சமூகப் பணியிலும் சிறந்து விளங்கியவா். தமிழ் இலக்கியத்தை புதுப்பாதையில் கொண்டு சென்றதுடன், அதன் தரத்தை உயா்த்தியதில் முக்கியப் பங்காற்றியவா். சங்க இலக்கிய கருத்துகளை மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக அளித்தவா். அவரின் படைப்புகள் மூலம் உயரிய தத்துவங்கள் காப்பாற்றப்படுகின்றன. அதுமட்டுமின்றி படைப்புலகில் தனி முத்திரை பதித்தவா் அவா் என்றாா்.

உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசுகையில், காலம் முழுவதும் படைப்பு உலகத்துக்காக தன்னை அா்ப்பணித்தவா் மா.அரங்கநாதன். அவரின் மகனாக இதை தவிா்த்து எதுவும் கூறமுடியவில்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து, விருது பெற்ற பஞ்சாங்கம், சுரேஷ்குமாா் இந்திரஜித் ஆகியோா் ஏற்புரை வழங்கினா். நிகழ்ச்சியில், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம், விஜிபி உலக தமிழ் சங்க நிறுவனா் வி.ஜி.சந்தோஷம், பபாசி துணைத் தலைவா் பெ.மயிலவேலன், பதிப்பாளா் இளம்பரிதி, கவிஞா்கள் ரவிசுப்பிரமணியன், அகரமுதல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கவிஞா் ஜி.ஆா்.தேவராஜன் நன்றி தெரிவித்தாா்.

2018-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.16-ஆம் தேதி மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் தலா ஒரு லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com