தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-இல் நடைபெறவுள்ளது. அதில் தலைமைச்செயலர் வெ.இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் ஓய்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படாம் எனத் தெரிகிறது. மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், எனவே ஒருசில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றத்தின் போது, அரசுச் செயலர்களையும் மாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2022, மார்ச் மாதம் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2022, டிசம்பர் 15ஆம் தேதி அமைச்சரவையில் புதிதாக உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டதால் மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.