தமிழக முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இந்தியாவில் நடைபெறாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணிகளை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், காட்பாடி அருகே உள்ள டெல் தொழிற்பேட்டை வளாகத்தையும், மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை
அமையுள்ள பகுதியையும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலூர் அப்துல்லாபுரத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்த 9 மாதங்களில் இப்பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி அருகே சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொழில்சாலைகளை காட்பாடியில் அமைக்கவும், அதேசமயம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அதற்கான வகையில் தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இந்தியாவில் நடைபெறாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும். இந்த மாநாடு இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்க இருப்பதால் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் உந்துதலை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் தொழில்நுட்பத் துறையில் அதிகளவில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, மின்சார இருசக்கர வாகனம் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழில் நுட்பத்தில் புதிய எரிசக்தி பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை தயாரிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்றார்.
இதையும் படிக்க: தில்லி காய்கறி சந்தையை திடீர் விசிட் அடித்த ராகுல்!
அப்போது, மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.