
எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகளும், நோய்களும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் அந்நோய்க்கு ஆளாவதாகத் தெரிகிறது.
உரிய விழிப்புணர்வும், மருத்துவ சிகிச்சைகளும் இருந்தால் இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
எலும்பு மஜ்ஜை என்றால்....
உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை இருக்கிறது. அதிலிருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. ஸ்டெம் செல்கள் அங்கிருந்து உருவாகி அதிலிருந்து ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்களாக பிரிகின்றன.
சிவப்பணுக்கள் உடலில் ஆக்சிஜனைக் கடத்துகின்றன. வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படுகிறது. தட்டணுக்கள், உடலில் இருந்து ரத்தம் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு 206 எலும்பு மஜ்ஜைகளிலில் இருந்தும் ரத்த அணுக்கள் உருவாகும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவை தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப்படும்.
மஜ்ஜை சார்ந்த நோய்கள்
புற்றுநோய் பாதிப்புகள்
* அக்யூட் லிம்பாய்ட் லூகிமியா
(நிணநீர் புற்றுநோய்)
* அக்யூட் மைலாய்ட் லூகிமியா
(எலும்பு மஜ்ஜை திசு புற்றுநோய்)
* மல்டிப்பிள் மைலோமா
(குருதிசார் புற்றுநோய்)
புற்றுநோய் இல்லாத பாதிப்புகள்
* தலசீமியா
* சிக்கில் செல் அனீமியா
* அப்லாஸ்டிக் அனீமியா
(மஜ்ஜை செயலிழப்பு)
* எதிர்ப்பாற்றல் பாதிப்பு
* தன்னுடல் தாக்கு நோய்
* வளர்சிதை நோய், மரபணு பாதிப்பு
காரணம்
எலும்பு மஜ்ஜையில் செல்கள் உற்பத்தியாகாமல் போவதற்கும், அதில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் தெளிவான காரணங்கள் இல்லை. அதேவேளையில் மரபணு சார்ந்த எலும்பு மஜ்ஜை நோய்களுக்கு நெருங்கிய உறவினர்களை திருமணம் புரிவது காரணமாகக் கூறப்படுகிறது.
அறிகுறிகள்
* தொடர் ரத்த சோகை
* தட்டணு, வெள்ளையணுக்கள் குறைவு
* நாள்பட்ட காய்ச்சல்
* கல்லீரல் வீக்கம்
* சோர்வு நிலை
* மயக்கம்
சிகிச்சை முறைகள்
இருவேறு முறையிலான மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
அலோஜெனிக் முறை
எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கீமோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவரது தேசமடைந்த செல்கள் முழுமையாக அழிக்கப்படும்.
அதன் பின்னர், தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்கள் நோயாளிக்கு செலுத்தப்படும். அந்த செல்கள் உடலுக்குள் ஊடுருவிய 24 மணி நேரத்துக்குள் புதிய செல்களைத் தோற்றுவிக்கும்.
இத்தகைய சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஓராண்டுக்கு பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆட்டோலோகஸ் முறை
இந்த முறையின் கீழ் கீமோதெரபி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு உடலில் உள்ள தேசமடைந்த செல்கள் அழித்தொழிக்கப்பட்டு, நோயாளியின் ஆரோக்கியமான ஸ்டெம் செல்கள் மீண்டும் செலுத்தப்படும். சொந்த ஸ்டெம் செல்களை புதுப்பித்து அளிப்பதே இந்த சிகிச்சை முறை. இத்தகைய சிகிச்சை பெற்ற நோயாளிகள் 3 மாதங்களுக்கு வெளியே செல்லக் கூடாது.
எவ்வாறு மாற்றப்படுகிறது?
* எலும்பு மஜ்ஜை மாற்ற சிகிச்சையின் போது தானமளிப்பவரின் ரத்தத்தையோ அல்லது இடும்பு எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த அணுக்களையோ எடுத்து அது தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. நோயாளி மற்றும் தானமளிப்பவரின் ரத்த அணுக்கள் குறைந்தது 50 சதவீத மரபணுப் பொருத்தத்துடன் இருத்தல் அதற்கு அவசியம்.
* தானமளிப்பவரின் உடல் எடையைக் கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் 20 மில்லி லிட்டர் ரத்தம் வீதம் தானமாகப் பெறப்படும். அவற்றிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரிக்கப்பட்டு நோயாளிக்கு வழங்கப்படும்.
* கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாக நோயாளியின் எலும்பு மஜ்ஜைக்குள் ரத்த அணுக்களை செலுத்தும் முறைதான் இருந்தது. தற்போது "ஹோமிங்' எனும் முறைப்படி ரத்த நாளத்துக்குள் ஸ்டெம் செல்களை செலுத்தினாலே அவை மஜ்ஜைக்குள் செல்லும் நுட்பம் வந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.