கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் சென்னை பல்கலை.யின் 165ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை பல்கலை.யில் பயின்ற 762 பேர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பட்டம் பெற்றனர். சென்னை பல்கலை.
இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 89,934 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.
மேலும் தொலைதூரக் கல்வியில் பயின்ற 12,166 பேர் உட்பட மொத்தம் 1,04,416 பேர் இந்தாண்டு பட்டம் பெற்றனர். அப்போது பேசிய அவர், பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுக்காட்டாக விளங்குகிறது. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதால் நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம். கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
6 குடியரசுத் தலைவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் ஆகியோர் இப்பல்கலை.யில் படித்துள்ளனர். சர் சி.வி.ராமன், சந்திரசேகர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் சென்னை பல்கலை.யில் படித்தவர்கள். திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது. மாணவர்கள் மிக உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாகக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும். இலக்கை நோக்கி முன்னேற கடினமாக உழைக்க வேண்டும். சமூக தேவையை அறிந்து உங்கள் துறைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என அவர் தமிழில் பேசினார்.