காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து காலை 5 மணிக்கு இயக்கப்பட வேண்டிய அரசுப் பேருந்து காலை 7 மணிக்கு இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தாம்பரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ - மாணவிகளும், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக நோயாளிகளும் சென்று வரும் நிலையில், அதிகாலை 5 மணிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இன்று வழக்கம்போல அரசுப் பேருந்துகள் வரும் என பயணிகள் காத்திருந்த நிலையில், அரசுப் பேருந்துகள் எதுவும் காலை 7 மணி வரை வரவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
அதன் பின்னர் காலை 7.20 மணி அளவில் முதல் பேருந்து, பேருந்து நிலையத்திற்கு வந்ததால், பணிக்கு செல்வதற்கு நேரம் ஆனதால் காத்திருந்த பயணிகள் கோபமடைந்து அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ,அரசுப் பேருந்து பணிமனை நிர்வாகத்தினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து உத்திரமேரூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அரசுப் பேருந்தில் ஏறி சென்றனர்.
உத்திரமேரூர் பகுதியில் அரசுப் போக்குவரத்து பணிமனை இருந்தும், இதைப்போல தொடர்ந்து பேருந்துகள் காலதாமதமாகி வருவதை அரசுப் பேருந்து நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உத்திரமேரூர் பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.