முறைகேடு தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சூரப்பாவுக்கு அழைப்பாணை அனுப்பப்படும் என சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு விதிமீறல்கள், முறைகேடு புகாா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: கடந்த காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா், முன்னாள் பதிவாளா், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநா் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தப்படவுள்ளது. இது குறித்து மூன்று மாதங்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.
ஏற்கெனவே சூரப்பா பதவியில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.