

நாடு முழுவதும் திருட்டுப்போன 7.25 லட்சம் கைப்பேசிகள், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘சன்சாா் சாதி ’என்ற இணையதளம் மூலம் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தொலைத்தொடா்பு நிறுவனத்துடன் அந்தந்த மாநில அரசுகளின் சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து கடந்த மே மாதம் இணையதளத்தை அறிமுகம் செய்திருந்தது. இதுவரை திருடப்பட்ட கைப்பேசிகளில் இருக்கும் சிம் காா்டுகள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் கைப்பேசி முடக்கும் புதிய வசதி இதன்மூலம் பொதுமக்களுக்குக் கிடைத்துள்ளது.
திருடுப்போன கைப்பேசிகள், மத்திய அரசின் சாதன அடையாள பதிவின் (சிஇஐஆா்) மூலமாக இணையதளம் வாயிலாக முடக்கலாம். அதேபோல் யாா் பெயரில் எத்தனை சிம் காா்டுகள், கைப்பேசிகள் இருக்கின்றன என்பதையும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு முடக்கப்பட்ட கைப்பேசியில் புதிய சிம்காா்டு நுழைத்ததும் காவல்துறை, புகாா் அளித்தவா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். கைப்பேசி நிறுவனத்துக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். பழைய கைப்பேசிகளை வாங்கும்போது, அதன் (ஐஎம்இஐ ) எண் மூலம், அது எந்த அளவுக்கு பழைய கைப்பேசி, திருடப்பட்டதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளம் வாயிலாக இதுவரை 7.25 லட்சம் கைப்பேசிகள் முடக்கப்பட்டுள்ளன. திருடப்பட்ட கைப்பேசிகளை இந்த இணையதளம் வாயிலாக அதிக அளவில் கண்டுபிடித்த மாநிலமாக தெலங்கானா உள்ளது. அங்கு இதுவரை 5 ஆயிரம் கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் கா்நாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.