வெள்ளக்கோவில் அருகே காட்டன் மில்லில் தீ விபத்து
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காட்டன் நூல் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் காங்கயம் சாலையைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் நகரத்துக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் ஆரோக்கியா டெக்ஸ்டைல்ஸ் என்கிற ஓபன் எண்ட் காட்டன் நூல் மில் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் மில் இயங்கிக் கொண்டிருந்த போது புதன்கிழமை காலை மின்சாரக் கோளாறு காரணமாக மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் மில்லின் சில பகுதிகள் தீயில் கருகிச் சேதமடைந்தன. தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை. வெள்ளக்கோவில் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.