தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070/- வீதம் ஹஜ் மானியத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஹஜ் மானியமாக 3987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070/- வீதம் மானியத் தொகை வழங்கிடும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர்.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது. அதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,070/- வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று தலா ரூ.25,070/-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.